“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு
செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள்
?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான்
கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச
நாளைக்குத் தான்.
“பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ
எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப்
போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லாமல் சொல்கின்றன மேலை நாடுகளில்
நடக்கும் சமாச்சாரங்கள்.
நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !
நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே
பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என
ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள்
தான் மேலை நாடுகளில் இப்போதைய ஹாட் டாப்பிக்.
எதை எப்படி விற்று எவ்வளவு லாபம்
பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த
வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த
குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச்
நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன
அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.
பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது
ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள்
குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும்
போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று
ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ
வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு
ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று
நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த
ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,
இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய
பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த
சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த
செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு
பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம்.
இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து
வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை
சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன்
நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது
என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக்
கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.
இப்போதெல்லாம் பெரும்பாலான
குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள்
தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது.
இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும்,
பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி
தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம்.
எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம்
ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன்
பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை
காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.
அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம்.
உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச்
சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர்
செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப்
போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள்
செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக்
காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை
நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும்
கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.
போதாக்குறைக்கு, “ஊர்லயிருந்து மாமா
பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா
சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு
கணிசமானது.
மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே
இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக்
கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது
வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன்
வைத்திருக்கிறார்களாம்.
“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன்
வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை
நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி
மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து
வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது
சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !
இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம
ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை
ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.
வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை
ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது,
உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச்
சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி
விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு
முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ?
உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு
மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட்
உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில்
புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன்
பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல்
எனும் சர்வதேச சந்தை இணைப்பு !
அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய்
இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட்
குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும்
அம்மாவிடம் பேசக் கூடும்.
முளைச்சு மூணு இலை விடறதுக்கு
முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை
அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன
நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப்
பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.
விட்டால்
“பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும்
வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள்
வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும்
பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம்.
தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது.
இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள்
பலருக்கும் கவலை இருக்கிறது.
ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன்
குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து
அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு
அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக்
கொள்வதே நல்லது என்கிறார் அவர்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்
உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.
பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும் பெரிதாக ஒன்றும்
ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு
விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர
வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து
வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள் பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில்
குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார்
அவர்.
குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை
பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள்
வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற
பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ
குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக்
காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.
//ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் //
ReplyDeleteமண்டையை பிளக்கும் வெயிலில் விளையாடிய எனக்கும், பிளாட்பாரத்தில் வாழும் குழந்தைகளை பார்த்த எனக்கு இது நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது...
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் 99% ஒசான் படலத்தால் வடிகட்டப் பட்டு விடுகிறது...
மற்றபடி குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அருகில் இருந்து பார்ப்பதும், கணினி உபயோகிப்பதும் கூட அயநியாக்காத கதிர்வீச்சால் பாதிக்கப் படக் கூடிய வாய்ப்பு உள்ளது...
உங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றி
ReplyDelete